தமிழக அரசியல் களம் மற்றும் ஐபிஎல் மைதானங்களை ஒருசேர அதிரவைத்த ‘அச்சு அசல்’ உருவ ஒற்றுமை விவகாரத்திற்கு, ஒரு நெகிழ்ச்சியான சந்திப்பின் மூலம் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. தமிழக வெற்றிக் கழகத் தலைவர் சி.ஜே.விஜய்யின் பதவியேற்பு விழாவின் போது, பாதுகாப்புப் பணியில் இருந்த ஒரு காவல்துறை அதிகாரி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் அன்ஷுல் கம்போஜ் போலவே இருந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாகப் பரவியது.

விஜய்யின் பதவியேற்பு விழாவில் மேடைக்கு அருகே நின்றிருந்த அந்த அதிகாரியைப் பார்த்த ரசிகர்கள், “அன்ஷுல் கம்போஜ் பார்ட்-டைம் வேலையாகப் போலீசில் சேர்ந்துவிட்டாரா?” என்று மீம்ஸ்களைப் பறக்கவிட்டனர். இந்த விவகாரத்தில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினும் இணைந்துகொண்டார். லக்னோ அணிக்கு எதிரான முக்கியமான போட்டிக்கு முன்னதாக அன்ஷுல் கம்போஜைக் டேக் செய்த அஸ்வின், “உடனே ஒரு கேப் (Cab) பிடித்து சேப்பாக்கம் மைதானத்திற்கு வந்து சேர்” என்று கிண்டலாகப் பதிவிட்டது வைரலானது.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக இணையத்தை ஆக்கிரமித்திருந்த அந்தப் போலீஸ் அதிகாரியை அன்ஷுல் கம்போஜ் நேரில் சந்தித்துள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்த இந்தச் சந்திப்பில், இருவரும் ஒருவரையொருவர் பார்த்து வியந்து சிரித்துக்கொண்டனர்.

 

“நிஜமான அன்ஷுல் கம்போஜ் அணியுடன்தான் இருக்கிறார்” என்று சி.எஸ்.கே நிர்வாகம் முன்னரே விளக்கம் அளித்திருந்த நிலையில், தற்போது இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. அரசியல், கிரிக்கெட் மற்றும் சமூக வலைதளங்கள் என மூன்று தளங்களையும் இணைத்த இந்தச் சுவாரஸ்யமான நிகழ்வு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.