கரூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகவுண்டர் தெற்கு பகுதியில் முத்துசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கன்னியம்மாள் (65) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு குழந்தை இல்லை. இதனால் கன்னியம்மாள் தனது தங்கை வெள்ளையம்மாளுக்கு முத்துசாமியை இரண்டாவதாக திருமணம் செய்து கொடுத்தார். இதில் அவர்களுக்கு 2 மகன்களும், 4 மகள்களும் இருக்கின்றனர்.

கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு முத்துசாமி உயிரிழந்தார். வயது முதிர்வு காரணமாக கன்னியம்மாள் தனது தங்கை வெள்ளையம்மாளுடன் அவரது மகன் விஸ்வநாதன் பராமரிப்பில் தோட்டத்தில் வீட்டில் வசித்து இருந்தார். நேற்று முன்தினம் கன்னியம்மாள் வேப்பம் பழங்களை எடுப்பதற்காக அருகே இருக்கும் தரிசு காட்டிற்கு சென்றார். நீண்ட நேரமாகியும் கன்னியம்மாள் வீட்டிற்கு வராததால் குடும்பத்தினர் அங்கு சென்று பார்த்தனர்.

அப்போது கழுத்து அறுக்கப்பட்டு முகம் சிதைந்த நிலையில் கன்னியம்மாள் கொலை செய்யப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கன்னியம்மாளின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் கன்னியம்மாளின் கழுத்தில் கிடந்த 2 பவுன் தங்க சங்கிலி, காதில் கிடந்த 2 பவுன் தங்கத்தோடு ஆகியவற்றை கொள்ளையடிப்பதற்காக மர்ம நபர்கள் கன்னியம்மாளை கழுத்தை அறுத்து கொலை செய்தது தெரியவந்தது. அவர்களை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.