கரூர் மாவட்டத்தில் உள்ள தாந்தாணிமலை பகுதியில் ஷேர் ஆட்டோ டிரைவரான பிரபு என்பவர் வசித்து வருகிறார். இவர் கரூரிலிருந்து தாந்தோணிமலை வழியாக பயணிகளை ஷேர் ஆட்டோவில் ஏற்றி சென்றுள்ளார். நேற்று வழக்கம் போல பயணிகளை ஏறி கொண்டு பிரபு தாந்தோணிமலையில் இருந்து கரூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் உழவர் சந்தை பகுதியில் சென்ற போது பிரேக் பிடிக்காததால் கட்டுப்பாட்டை இழந்த ஷேர் ஆட்டோ தாறுமாறாக ஓடியது. அதே சமயம் பொதுமக்கள் மற்றும் வாகனங்கள் மீது மோதாமல் இருப்பதற்காக பிரபு மின் கம்பங்களுக்கு இடையே ஆட்டோவை மோதி சாமர்த்தியமாக செயல்பட்டார்.

உடனடியாக அந்த பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பிரபு மற்றும் பயணிகளை மீட்டனர். அதிர்ஷ்டவசமாக ஆட்டோவில் இருந்தவர்கள் காயமின்றி உயிர் தப்பினர். உடனடியாக அந்த பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதுகுறித்து அறிந்த மின்வாரிய ஊழியர்கள் மின்கம்பங்களை சரி செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.