கன்னியாகுமரி அருகில் உள்ள ஆரல்வாய்மொழியை சேர்ந்தவர் கவின் (22). இவர் சென்னையிலுள்ள கார் உற்பத்தி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரும் கும்பகோணம் மேலக்காவேரி பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியும் ஆன்லைன் பப்ஜி விளையாட்டின் வாயிலாக நண்பர்களாக இருந்த நிலையில், அது காதலாக மாறியது. இதையடுத்து கடந்த 17ம் தேதி இருவரும் வீட்டை விட்டு வெளியேறினர். திடீரென்று தன் பெண்ணை காணாததால் பெற்றோர் இதுபற்றி போலீஸ் நிலையத்தில் புகாரளித்தனர்.

அதன்பின் அவர்களது தொலைபேசி எண்ணை சைபர் கிரைம் காவல்துறையினர் உதவியுடன் கண்டறிந்து 17 வயது சிறுமியையும், அவரின் காதலனையும் கும்பகோணம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். அதனை தொடர்ந்து சிறுமியை பெற்றோர்களிடம் அனுப்பி வைத்தனர். 17 வயது சிறுமியை கடத்தி சென்று தனிமையில் இருந்ததால் கவின் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். அதன்பின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.