உத்தரபிரதேச மாநிலம் கௌசாம்பி மாவட்டத்தில், ஒரு பெண்ணின் சடலம் சடோக் காட் தகன மைதானத்திற்கு மோட்டார் சைக்கிளில் எடுத்துச் செல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலாகி, அரசியல் தலையீடுகளையும் மக்களுக்கிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளன.
மரணித்த பெண் புத்தராணி (வயது குறிப்பிடப்படவில்லை), கௌசாம்பி மாவட்டத்தின் மொஹபத்பூர் ஜீதா கிராமத்தைச் சேர்ந்தவர். மரணம் சந்தேகத்துக்கிடமான சூழலில் நிகழ்ந்ததாக உறவினர்கள் தெரிவித்தனர். அவர் கொலை செய்யப்பட்டதாகக் குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
போலீசார் பிரேத பரிசோதனைக்கு உடலை அனுப்பிய பின்னர், அதை மீண்டும் உறவினர்களிடம் ஒப்படைத்தனர். ஆனால், மருத்துவமனை அல்லது அரசு ஏற்பாடு செய்த சடலம் கொண்டுசெல்லும் வாகனம் கிடைக்காததால், குடும்பத்தினர் அவசரமாக சடலத்தை மோட்டார் சைக்கிளில் கட்டிக்கொண்டு தகன மண்டபம் நோக்கிச் சென்றதாக தெரிவித்துள்ளனர்.
இந்தக் காட்சி கடந்த சில தினங்களில் சமூக ஊடகங்களில் வேகமாக பரவி, அரசின் பொறுப்பின்மை குறித்து கடுமையான விமர்சனங்களை கிளப்பியுள்ளது. முன்னாள் முதலமைச்சரும் சமாஜ்வாதி கட்சித் தலைவருமான அகிலேஷ் யாதவ், தனது X பக்கத்தில் இந்த வீடியோவை பகிர்ந்துள்ளார்.
“இதை விட வெட்கக்கேடானது வேறு எதுவும் இருக்க முடியாது. முதலமைச்சர் மற்றும் சுகாதார அமைச்சருக்கு சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை,” என்று அவர் கடுமையாக விமர்சித்தார்.
Welcome to World’s Fourth Largest Economy
In Kaushambi, #UttarPradesh Woman’s Body is Transported on a Bike due to Unavailability of Ambulance.#VicePresidentElection pic.twitter.com/0V4LZBe58T
— তন্ময় l T͞anmoy l (@tanmoyofc) September 8, 2025
இந்த வீடியோவைத் தொடர்ந்து, கௌசாம்பி மாவட்ட நீதிபதி மதுசூதன் ஹல்கி, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அறிக்கை கோரி விசாரணையை துவக்கியுள்ளார்.
மேலும் இதேபோன்று மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில், கடந்த மாதம், அமித் யாதவ் என்ற நபர் தனது மனைவியின் சடலத்தை மோட்டார் சைக்கிளில் கட்டி எடுத்துச் சென்ற சம்பவம் வேதனையை ஏற்படுத்தியது. கியார்சி அமித் யாதவ் என்பவர் வேகமாக வந்த லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். வழிப்போக்கர்களிடம் பலமுறை உதவி கேட்டும் கிடைக்காததால், தன்னிச்சையாக சடலத்தை பைக்கில் எடுத்துச் செல்ல நேர்ந்ததாக அமித் யாதவ் கூறினார்.
