தமிழ்நாட்டில் மின் நுகர்வோர்கள் இரண்டு கோடியே 67 லட்சம் பேர் இருக்கின்றனர். கடந்த அக்டோபர் 6-ம் தேதி இவர்கள் அனைவரும் தங்களது மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என மின்வாரியம் அறிவித்துள்ளது. இந்நிலையில் 15-ஆம் தேதி உடன் இதற்கான கால அவகாசம் நிறைவடைய உள்ள சூழலில் இதுவரை 90% பேர் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைத்து இருக்கின்றனர். தற்போது இதனை ஆய்வு செய்தபோது பல்வேறு இடங்களில் உரிமையாளர், குத்தகைக்காரர், இணை உரிமையாளரின் ஆதார் எண்கள்  அவர்களுக்கு தெரியாமலேயே மின் இணைப்பு எண்ணுடன் இணைக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

மேலும் அதிக அளவிலான மின் இணைப்பு எண்களுடன் தொடர்பில்லாத ஆதார் எண்கள் இணைக்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து மின்வாரியம் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது,  சம்பந்தப்பட்ட நபர்களில் ஆதார் எண் மட்டுமே மின் இணைப்பு எண்ணுடன் இணைக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். அதேபோல் உயர் அதிகாரிகள் தனிக் கவனம் செலுத்தி இது குறித்த விவரங்களை தெரிவிக்க வேண்டும் என அனைத்து பகிர்மான பிரிவு தலைமை பொறியாளர்கள், கண்காணிப்பு பொறியாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.