ஆந்திரா பாபட்லா மாவட்டத்தில் 10ம் வகுப்பு படிக்கும் மாணவர் அடையாளம் தெரியாத சிலரால் உயிருடன் எரிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. உயிரிழந்த மாணவன்  அமர்நாத் என அடையாளம் காணப்பட்டு உள்ளார். அவர் டியூஷனுக்குச் சென்றுகொண்டிருந்த போது தாக்குதல் நடத்தியவர்கள் பெட்ரோலை ஊற்றி தீ வைத்ததாக தகவல்கள் தெரிவிக்கிறது.

இந்த சம்பவத்தை அடுத்து படுகாயமடைந்த அவர் ஆபத்தான நிலையில் குண்டூரிலுள்ள அரசு பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். எனினும் அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். வெங்கடேஷ்வர் ரெட்டி என்பவரும் இன்னும் 2 பேரும் சேர்ந்து தன்னை தீ வைத்து எரித்ததாக அந்த மாணவன் காவல்துறையினரிடம் மரண வாக்குமூலம் அளித்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வருகின்றனர்.