கடலூர் மாவட்டத்தில் உள்ள காட்டு கூடலூர் அம்மன் கோவில் தெருவில் சுந்தரமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். விவசாயியான சுந்தரமூர்த்திக்கு விஜயலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகள்கள் இருக்கின்றனர். நேற்று மதியம் ஒரு மணிக்கு சுந்தரமூர்த்தி பழைய கொள்ளிடம் ஆற்றில் தனது மாட்டை குளிப்பாட்டியுள்ளார்.

அப்போது திடீரென வந்த முதலை சுந்தரமூர்த்தியின் காலை பிடித்து ஆற்றுக்குள் இழுத்து சென்றதைக் கண்டு அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து அறிந்த போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் சம்பவ இடத்திற்கு சென்று மூன்று மணி நேரம் தேடுதல் போராட்டத்திற்கு பிறகு சுந்தரமூர்த்தியின் உடலை மீட்டனர்.

பின்னர் அவரது உடல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் பழைய கொள்ளிடம் ஆற்றில் இருக்கும் முதலையை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த சம்பவம் கிராம மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.