சிம்லாவிலுள்ள இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரியில் நோயாளி ஒருவருக்கும் மருத்துவருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக டாக்டர் ராகவ் நருலா வெளியிட்டுள்ள விளக்கத்தில், சிகிச்சையின் போது அந்த நோயாளி தன்னை தகாத வார்த்தைகளால் திட்டியதுடன், அங்கிருந்த ஐவி ஸ்டாண்டை எடுத்துத் தாக்கியதாகத் தெரிவித்துள்ளார்.

இந்தத் தாக்குதலில் தனது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாகவும், தன்னைத் தற்காத்துக் கொள்ளவே தான் அவ்வாறு நடந்துகொண்டதாகவும் அவர் கூறியுள்ளார். “நாங்களும் மனிதர்கள் தான்” என்று உருக்கமாகப் பேசியுள்ள அவர், கடந்த எட்டு ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான நோயாளிகளுக்குச் சிகிச்சையளித்திருப்பதாகவும், தன் மீது இதுவரை எந்தப் புகாரும் வந்ததில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

“>

இந்தத் தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து, மருத்துவமனை நிர்வாகம் டாக்டர் ராகவ் நருலாவை இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது. மேலும், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், விசாரணைக்காக மூன்று பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. முன்னதாக வெளியான வீடியோவில், நோயாளி மருத்துவரை உதைப்பதும், அதற்குப் பதிலாக மருத்துவர் அவரைத் தாக்குவதும் பதிவாகியிருந்தது.

இந்நிலையில் மருத்துவமனையில் நடந்த இந்த வன்முறைச் சம்பவம் மருத்துவர்கள் மற்றும் நோயாளிகளிடையே இருக்க வேண்டிய உறவுமுறை குறித்த விவாதங்களை மீண்டும் எழுப்பியுள்ளது. தற்போது இந்த விவகாரம் குறித்து முழுமையான விசாரணை நடைபெற்று வருகிறது.