மராட்டியத்தில் மும்பை, பூனே போன்ற நகரங்களில் பைக் டாக்சி சேவைகள் சமீப காலமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் பைக் டாக்சிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த மாதம் புனேவில் ஆட்டோ, டாக்சி  டிரைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து ராபிடோ பைக் டேக்ஸி நிறுவனத்திற்கு புனேவில் பைக் டாக்சி  சேவையை இயக்க அனுமதி மறுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து ரேபிடோ நிறுவனம் பைக் டேக்சி  சேவைக்கு உரிமம் வழங்க மாநில அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மும்பை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளது.

ஆனால் ஐகோர்ட் பைக் டாக்சி சேவையை தற்காலிகமாக நிறுத்த உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் மராட்டிய அரசு திடீரென பைக் டாக்சிகளுக்கு தடைவிதித்து அரசாணை பிறப்பித்துள்ளது. அதில் சாலை பாதுகாப்பை உறுதி செய்திடவும், பொதுமக்கள் மற்றும் பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் பைக் டாக்சிகளுக்கு தடை விதித்து பிறப்பித்த அரசாணையை நேற்று மாநில அரசு மும்பை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ளது. இதனை தொடர்ந்து பைக் டாக்சி உரிமம் கேட்டு ரேபிடா நிறுவனம் தாக்கல் செய்த மனுவை ஐகோர்ட் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.