கடலூர் மாவட்டத்தில் உள்ள ராமநத்தம் வெலிங்டன் ஏரிக்கு செல்லும் வாய்க்கால் கரையோரம் இருக்கும் மரத்தில் 55 வயது மதிக்கத்தக்க ஆண் தூக்கில் சடலமாக தொங்கினார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அந்த நபரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் சடலமாக மீட்கப்பட்ட நபர் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கோபு(54) என்பது தெரியவந்தது.

இவரது மனைவி சங்கீதா அரசு பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இந்த தம்பதியினருக்கு இரண்டு பிள்ளைகள் இருக்கின்றனர். இந்நிலையில் தனியார் பேருந்து டிரைவராக வேலை பார்த்த கோபு கடந்த சில ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்டு இருந்தார். ஏற்கனவே அவர் 2 ஆண்டுகளுக்கு முன்பு தற்கொலைக்கு முயன்றார். கடந்த 2-ஆம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற கோபு ஏரிக்கரையோரம் இருக்கும் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது. அவரது தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.