கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே ராயல் டவுன் என்ற பகுதி உள்ளது. இந்தப் பகுதியில் மே வால்ட் (54) என்பவர் வசித்து வருகிறார். இவர் மத்திகிரி பகுதியில் உள்ள ஒரு தேவாலயத்தில் மத போதகராக இருக்கிறார். இந்த பகுதியில் நேபால் நாட்டைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் 15 வருடங்களாக வசித்து வருகிறார்கள். இந்த குடும்பத்தில் 17 வயது சிறுமி ஒருவர் வசித்து வருகிறார். இவர் 12 ஆம் வகுப்பு முடித்துவிட்டு நீட் தேர்வுக்கு தயாராகி வருகிறார்.

இந்த மாணவிக்கு மே வால்ட் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது தொடர்பாக சிறுமி கிருஷ்ணகிரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகளிடம் புகார் கொடுத்துள்ளார். அதன் பிறகு அதிகாரி ஒருவர் ஓசூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்‌. அந்த புகாரின் படி காவல்துறையினர் நடத்திய விசாரணையில் மதபோதகர் பாலியல் தொல்லை கொடுத்தது உண்மை ‌ என்று தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.