புண்ணிய பூமியான கேதார்நாத் யாத்திரை என்பது பக்தர்களின் நம்பிக்கையையும், உடல் வலிமையையும் சோதிக்கும் ஒரு பயணமாகும். மலையேற முடியாத முதியவர்கள் மற்றும் உடல்நலம் குன்றியவர்களை உள்ளூர் சுமைதூக்கும் தொழிலாளர்கள் கூடைகளில் வைத்துச் சுமந்து செல்வது வழக்கம். ஆனால், சமீபத்தில் இணையத்தில் வைரலாகும் ஒரு வீடியோ பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதில், நன்கு உடல்வலிமையுடன் இருக்கும் ஒரு வாலிபர், ஒரு ஏழைத் தொழிலாளியின் முதுகில் ஏறி அமர்ந்து பயணம் செய்கிறார். அந்தத் தொழிலாளி அந்த பாரத்தைத் தாங்க முடியாமல் ஒவ்வொரு அடியையும் கஷ்டப்பட்டு எடுத்து வைக்கும் காட்சிகள் காண்போரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. ​இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலரும் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.

“உடல் தகுதியே இல்லாமல் எதற்குப் புனிதப் பயணம்?” என்றும், “வெளிநாடுகளில் 70 வயது முதியவர்கள் கூட மலையேறுகிறார்கள், ஆனால் நம்மூர் இளைஞர்கள் இப்படிச் சோம்பேறியாக இருக்கிறார்களே” என்றும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. பக்தி என்பது கஷ்டப்பட்டு இறைவனை அடைவதே தவிர, மற்றவர்களைக் கஷ்டப்படுத்துவது அல்ல எனப் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்தச் சம்பவம் தற்போது இணையத்தில் “உடல் நலம் மற்றும் சோம்பேறித்தனம்” குறித்த பெரிய விவாதத்தையே கிளப்பியுள்ளது.