பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள திருவளகுறிச்சியில் பிரபாகரன்(31) என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2017-ஆம் ஆண்டு வேலைக்கு சேர்ந்த பிரபாகரன் தற்போது பெரம்பலூர் மாவட்ட ஆயுத படையில் காவலராக பணிபுரிந்து வருகிறார். இவர் தண்ணீர் பந்தலில் இருக்கும் மாவட்ட ஆயுதப்படை போலீஸ் குடியிருப்பில் தங்கி வேலைக்கு சென்று வந்தார்.

கடந்த 12-ஆம் தேதி வேலை முடிந்து மது போதையில் வீட்டிற்கு வந்த பிரபாகரன் மற்றொரு முதல் நிலை காவலர் ஒருவரின் மனைவி வீட்டின் முன்பு இருக்கும் படிக்கட்டில் நின்று செல்போனில் பேசிக் கொண்டிருந்ததை பார்த்தார். உடனே பிரபாகரன் அந்த பெண்ணை பலாத்காரம் செய்யும் நோக்கத்தில் வாயைப் பொத்தி மேல் தளத்திற்கு தூக்கிச் செல்ல முயன்றார் உடனே சுதாரித்துக் கொண்டு அந்த பெண் பிரபாகரனை தள்ளிவிட்டு வீட்டிற்கு ஓடி சென்று தனது கணவரிடம் நடந்த சம்பவத்தை கூறியுள்ளார்.

இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அந்த பெண்ணின் கணவரும், ஆயுதப்படையில் குடியிருக்கும் சக போலீசாரும் இணைந்து பிரபாகரனை பிடித்து தர்ம அடி கொடுத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் பிரபாகரனை கைது செய்தனர். பிரபாகரனுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் இருப்பது குறிப்பிடத்தக்கதாகும். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.