கோவை மாவட்டம் ஒண்டிப்புதூர் பகுதியில் 17 வயது சிறுவன் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை சிங்காநல்லூர் பகுதிக்கு உட்பட்ட ஒண்டிப்புதூர் பகுதியில் இன்று பட்ட பகலில் இளைஞர் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒண்டிப்புதூர் பகுதியில் பொதுமக்கள் அதிகம் கூட கூடிய சாலையில், எப்போதும் பரபரப்பாக இருக்கும் பகுதியில் இந்த சம்பவமானது நடந்து இருக்கிறது. இளைஞர் வெட்டப்பட்ட சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், உடற்கூறு ஆய்வுக்காக அவரது உடலானது மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

இதுகுறித்து சம்பவ இடத்தில் தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய முதற்கட்ட விசாரணையில் காதல் விவகாரம் தொடர்பாக இந்த கொலை சம்பவம் நடந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் விசாரணைக்கு பின்னரே முழு விவரம் தெரிய வரும். கொலை செய்து விட்டு தப்பிய 17வயது சிறார் கோவை சூலூர் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். தொடர்ந்து காவல் நிலையத்தில் அந்த சிறுவனிடம்  போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 17 வயது சிறுவனை மற்றொரு சிறுவன் வெட்டிக்கொலை செய்த சம்பவம் கோவையில் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.