திருவாரூர் மாவட்டத்தில் வருகிற 21-ஆம் தேதி தாலுகா வாரியாக பொது விநியோகத்திட்ட சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறுகிறது. இது குறித்து திருவாரூர் மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, திருவாரூர் தாலுகா திருநெய்பேர் கிராமத்தில் திருவாரூர் வருவாய் கோட்ட அலுவலர் தலைமையிலும், குடவாசல் தாலுகா செல்லூர் கிராமத்தில் திருவாரூர் சரகர் துணை பதிவாளர் தலைமையிலும், நன்னிலம் தாலுகா சேங்கனூர் கிராமத்தில் நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை மேலாண் இயக்குனர் தலைமையிலும், வலங்கைமான் தாலுகா ஆதிச்ச மங்கலம் கிராமத்தில் மாவட்ட வளங்கள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் தலைமையிலும், நடைபெறுகிறது.

அதேபோல மன்னார்குடி தாலுகா விக்ரம பாண்டியன் கிராமத்தில் மன்னார்குடி வருவாய் கோட்ட அலுவலர் தலைமையிலும், நீடாமங்கலம் தாலுகா ரிஷியூர் கிராமத்தில் கூட்டுறவு சங்கங்கள் இணைப்பதிவாளர் தலைமையிலும், திருத்துறைப்பூண்டி தாலுகா விளத்தூர் கிராமத்தில் மன்னார்குடி கழக துணைப்பதிவாளர் தலைமையிலும், கூத்தாநல்லூர் தாலுகா குலமாணிக்கம் கிராமத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் முதுநிலை மண்டல மேலாளர் தலைமையிலும், அந்தந்த கிராம நிர்வாக அலுவலகத்தில் வைத்து நடைபெறுகிறது.

அதனால் மேற்கண்ட பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் தங்களது குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தம் செய்தல், புதிய மற்றும் நகல் குடும்ப அட்டை கோரும்  மனுக்கள், செல்போன் எண் மாற்றம் போன்றவற்றிற்கு மனு அளித்துக்கொள்ளலாம். மேலும் தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் மற்றும் சேவை குறைபாடுகள் அத்தியாவசிய பொருட்களின் தரம் குறித்த புகார்கள் போன்ற மனுக்களை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு அளித்துக் கொள்ளலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.