டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் (ஜெ.என்.யு.) மாணவர்களுக்கு இடையில் வெடித்த வன்முறை சம்பவத்தை தொடர்ந்து, இடதுசாரி மாணவர் அமைப்புகள் நேற்று போராட்டம் நடத்தின.

ஆர்எஸ்எஸ் மாணவர் அமைப்பான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ஏபிவிபி) உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, இடதுசாரி மாணவர் குழுக்கள் வசந்த் குஞ்ச் காவல் நிலையம் நோக்கி பேரணி சென்றன.

 

பேரணியைத் தடுக்க முயன்றபோது, காவல்துறையினருக்கும் மாணவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் மோதல் உருவானது. இதில் ஆறு காவலர்கள் காயமடைந்ததாகவும், 28 மாணவர்கள் கைது செய்யப்பட்டதாகவும் டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்களில் ஜெஎன்யு மாணவர் சங்கத் தலைவர் நிதீஷ் குமார், துணைத்தலைவர் மனிஷா, பொதுச் செயலாளர் பாத்திமா ஆகியோரும் அடங்குவர்.

இதற்கு முன்னதாக, கடந்த வெள்ளிக்கிழமை பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தின்போது இடதுசாரி மாணவர்கள் மற்றும் ஏபிவிபி உறுப்பினர்களுக்கு இடையே வன்முறை ஏற்பட்டது.

அப்போது ஏபிவிபி உறுப்பினர்கள் தங்கள் எதிர்கட்சி மாணவர்களை தாக்கியதாக இடதுசாரி அமைப்புகள் குற்றம் சாட்டியதால், அதற்கெதிராகவே இப்போராட்டம் நடத்தப்பட்டது. இந்த சம்பவம் ஜெஎன்யு வளாகத்திலும், டெல்லி மாணவர் அரசியலிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.