கொரோனா தொற்று ஊரடங்கு காலத்திற்குப் பிறகு பெற்றோர்கள் பெரும்பாலானவர்கள் தனியார் பள்ளிகளில் பயின்று வந்த தங்களுடைய குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்த்தனர். மேலும் புதிதாகவும் பல குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்த்து வந்தனர். இதனால் தமிழக அரசு பள்ளிகளின் கல்வி தரம் மற்றும் செயல்பாடுகளை மேம்படுத்த பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. இதன் விளைவால் கடந்த வருடம் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை எண்ணிக்கை அதிகரித்தது.

இந்த நிலையில் அரசு பள்ளிகளில் வரும் கல்வியாண்டுக்கான (23-24) மாணவர் சேர்க்கை நாளை திங்கட்கிழமை முதல் தொடங்குகிறது. “அரசு பள்ளிகளை கொண்டாடுவோம்” என்ற தலைப்பில் மாணவர் சேர்க்கைக்கான விழிப்புணர்வுப் பேரணி ஏப்.17-28 வரை அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்படவுள்ளது. மேலும், 1-9ம் வகுப்புகளில் தங்களது குழந்தைகளை சேர்க்க விரும்பும் பெற்றோர் அருகே உள்ள அரசு பள்ளிகளுக்கு சென்று குழந்தைகளின் பெயரை உடனடியாக பதிவு செய்யவும்.