சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளர் ஹூசைன் அகமது அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, சுதந்திர தின விழாவை முன்னிட்டு இந்திய அஞ்சல் துறை சார்பாக இன்று, நாளை ஆகிய இரு தினங்கள் 7.5 லட்சம் பெண் குழந்தைகளுக்கு செல்வமகள் சேமிப்பு திட்டம் தொடங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. காரைக்குடி அஞ்சல் கோட்டத்தில் உள்ள அனைத்து அலுவலகங்களிலும் இந்த சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இதில் பத்து வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோர் பாதுகாவலர் ரூ.250 செலுத்தி அனைத்து தபால் நிலையங்களிலும் கணக்கை தொடங்கிக் கொள்ளலாம்.

மேலும் ஒரு நிதியாண்டில் குறைந்தபட்ச தொகையாக ரூ.250 அதிகபட்ச தொகையாக ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் வரையும் செலுத்திக் கொள்ளலாம். இந்த திட்டத்திற்கு தற்போது 7.6 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. இந்நிலையில் கணக்கில் செலுத்தும் தொகை, வட்டி மற்றும் உதிர்வு தொகை என அனைத்திற்கும் வருமான வரி விலக்கு பெற்றுக் கொள்ளலாம். அதேபோல் பெண் குழந்தைகள் பத்தாம் வகுப்பு படித்த பின்பு அல்லது 18 வயது ஆன பின்பு நேர்ப்படிப்பிற்காக 50 சதவீத தொகையை பெற்றுக் கொள்ளலாம். இது மட்டுமல்லாமல் பெண் குழந்தையின் திருமணத்தின் போது அல்லது கணக்கு தொடங்கி 21 ஆண்டுகளுக்குப் பின் முழு தொகையையும் எடுத்துக் கொள்ளலாம். அதனால் பெண் குழந்தைகளின் பெற்றோர்கள் இந்த முகாமில் கலந்து கொண்டு இந்த திட்டத்தை தொடங்கி பயன் பெற்றுக் கொள்ளலாம் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.