இன்றைய காலகட்டத்தில் நம் கையில் வைத்திருக்கும் செல்போன் மூலமாக பல்வேறு நன்மைகள் இருந்தாலும் அதே அளவுக்கு பல மோசமான சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. குறிப்பாக பணம் திருட்டு, தவறான மற்றும் ஆபாச புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவிடுதல் போன்ற சம்பவங்கள் தற்பொழுது எல்லாம் அதிகரித்துவிட்டது. சமீபத்தில் புதுவையைச் சேர்ந்த 18 வயது இளம் பெண் ஒருவர் டேட்டிங் செயலி மூலமாக சென்னையை சேர்ந்த திலீப் என்பவரோடு பழகி வந்துள்ளார். அதன்பிறகு இருவரும் காதலிப்பதாக கூறி வீடியோ மற்றும் ஆடியோ காலில் பேசி வந்திருக்கிறார்கள்.

சில நாட்களில் அந்த நபரை பிடிக்காமல் அந்த பெண் விலக தொடங்கி விட்டார். இதனால் கோபமடைந்த அந்த நபர் அந்த பெண்ணை நிர்வாண புகைப்படங்களை இணையத்தில் பதிவிட போவதாக மிரட்டி இருக்கிறார். இதனால் பயந்து போன அந்த பெண் சைபர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து இது குறித்து சைபர் கிரைம் போலீசார் கூறுகையில் கடந்த எட்டு மாதங்களில் மட்டும் 15க்கும் மேற்பட்ட பெண்கள் இது போன்ற சம்பவத்தில் சிக்கியுள்ளார்கள். எனவே யாரும் இணையதளத்தில் புகைப்படத்தை பதிவிட வேண்டாம். குறிப்பாக பெண்கள் யாரையும் நம்பி தங்களுடைய தனிப்பட்ட புகைப்படம் மற்றும் வீடியோக்களை பகிரக்கூடாது என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.