முன்னாள் அமைச்சர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி வேலுமணி அதிமுக மதுரை மாநாட்டில் பேசியபோது,  சிறப்பு வாய்ந்த எழுச்சிமிகு மாநாட்டிலே பேச வாய்ப்பு தந்தமைக்கு நன்றி. கழக நிறுவனத் தலைவர் மூன்றெழுத்து மூல மந்திரம்,  புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்களை வணங்கி,  புரட்சித்தலைவி அம்மா அவர்களை வணங்கி,  உழவன் சிரிக்க உலகம் செழிக்கும் என்ற தத்துவத்தை மெய்நிறுத்திய நம்மில் ஒருவர் –  மக்கள் விரும்பும் முதல்வர்,  கழகப் பொதுச் செயலாளர்,  சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர்,  வருங்கால முதல் அமைச்சர் அண்ணன் எடப்பாடியார் அவர்களுக்கு மீண்டும் ஒருமுறை நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன்.

கடல் அருகே கூட்டம் இருந்தால் அது சூரசம்ஹாரம், மலை அருகே கூட்டம் இருந்தால் அது திருவண்ணாமலை தீபம், ஆற்றில் கூட்டம் என்றால் அது மதுரை கள்ளழகர், மக்கள் கூட்டத்தில் தொண்டர் கூட்டத்தில் தலைவர் மிதந்து வந்தால் அது ”அஇஅதிமுக” மாநாடு. , வீர மாநாடு எழுச்சி மாநாடு. துரோகிகள் திக்கு முக்காடிய மாநாடு. உலக வரைபடத்தில் சாமானிய மனிதன் தலைமையேற்று நடத்தும் மாநாட்டை சரித்திர மாநாடாக மாற்றிய பெருமை அண்ணன் எடப்பாடியாருக்கு மட்டுமே உண்டு.

கட்சியின் பிளவு, கழகத்தில் குழப்பம்,  ஆட்சியில் விரிசல் இவை அனைத்தையும் நமக்குள்ளே கொடுத்தார்கள். இதை நாடு நன்கு அறியும். இனி  அதிமுக முடிந்தது என்று சொன்னார்கள்.  அதற்கெல்லாம் ஒரு முற்றுப்புள்ளி ஆக அறநெறியில்… தர்மத்தின் பாதையில்… தொண்டனின் கழகத்தை மாற்றியும், தமிழகத்தையும் வழிநடத்தி,  தன் தோளில் சுமந்து,  துரோகத்தை மதி கொண்டு வென்றவர் உண்மையான தலைவர் எடப்பாடியார்.

எங்களைப் பொறுத்தவரையில் அண்ணன் எடப்பாடியார் தான் அம்மாவின் ஆண் உருவம்.  எதிர்ப்பவர்களை வென்றவர் எடப்பாடியார், எதிரிகளை வென்றவர் எடப்பாடியார்,  மக்களின் மனம் நிறைந்தவர் எடப்பாடியார்,  அம்மா சொன்னார்கள் மக்களால் நான்,  மக்களுக்காக நான் என்றார்கள். இன்றைக்கு பார்த்தீங்கன்னா…. தொண்டர்கள் சொல்றாங்க… தொண்டரால் எடப்பாடியார்,  தொண்டருக்காகவே எடப்பாடியார் என்று சொல்கிறார்கள் என தெரிவித்தார்.