சேலம் மாவட்டத்தில் உள்ள வேலகவுண்டனூர் பகுதியில் மோகன்ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் பவித்ரா என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இருவரும் பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகு காதல் தம்பதியினர் சென்னையில் வசித்து வந்தனர். தற்போது பவித்ரா கர்ப்பிணியாக இருக்கிறார். இந்நிலையில் ஊருக்கு சென்று வருவதாக கூறிய மோகன்ராஜ் அதன் பிறகு பவித்ராவை பார்க்கவில்லை. மேலும் அவர் பவித்ராவை புறக்கணித்ததாக தெரிகிறது.

இதனால் பவித்ரா தனது கணவரின் வீட்டிற்கு சென்று தன்னை சேர்த்துக் கொள்ளுமாறு கூறினார். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்ததாக தெரிகிறது. இதுகுறித்து பவித்ரா ஓமலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் மோகன்ராஜ் உள்பட 7 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்தனர். இந்நிலையில் தனது கணவரை தன்னுடன் சேர்த்து வைக்க வலியுறுத்தி பவித்ரா அவரது வீட்டிற்கு முன்பு போராட்டம் நடத்தி வருகிறார். நேற்று மூன்றாவது நாளாக அந்த போராட்டம் நீடித்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.