மதுரை மாவட்டத்திலுள்ள தனக்கன்குளம் கார்த்திகா நகர் பகுதியில் ஓய்வு பெற்ற போக்குவரத்து துறை அதிகாரியான ரங்கராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு உதய் (28) என்ற மகன் இருந்துள்ளார். இவர் விளையாட்டுப் போட்டிகளில் ஒருங்கிணைப்பாளராக இருந்து வந்தார். இவருக்கு திருமணம் நிச்சயக்கப்பட்டு அடுத்த மாதம் திருமணம் நடக்க இருந்தது. நேற்று முன்தினம் இரவு நேரம் மாடியில் நண்பர்களுடன் உதய் பேசிக்கொண்டிருந்தார்.

நேற்று காலை நீண்ட நேரமாகியும் உதய் வீட்டுக்குள் வராததால் பெற்றோர் மகனை தேடி மாடிக்கு சென்றனர். அங்கு உதய் இல்லை. அவரது செல்போன் மட்டும் இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோரும், நண்பர்களும் உதயை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். இந்நிலையில் அதே பகுதியில் இருக்கும் ஒரு வீட்டு காம்பவுண்ட் சுவரின் அருகே காயத்துடன் உதய் இறந்து கிடந்ததை கண்டு குடும்பத்தினர் கதறி அழுதனர்.

இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உதயின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் மாடியில் இருந்து குதித்து உதய் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது தவறி விழுந்து இறந்தாரா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.