குடும்பப் பிரச்சினையைத் தீர்க்க முயன்ற மாமியாரை, மருமகனே ஹெல்மெட்டால் அடித்துக் கொன்ற சம்பவம் மேட்சல் மாவட்டம் செங்கிசெர்லா பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செங்கிசெர்லா பகுதியைச் சேர்ந்த அருணா என்பவரின் மகளுக்கும், ஸ்னீத் என்பவருக்கும் கடந்த ஒரு ஆண்டிற்கு முன்பு காதல் திருமணம் நடைபெற்றது. இவர்களது திருமண வாழ்க்கையில் கடந்த சில மாதங்களாகத் தொடர்ந்து தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. தனது மகளின் குடும்பப் பிரச்சினையைத் தீர்த்து வைக்க அருணா அவ்வப்போது தலையிட்டுப் பேசி வந்துள்ளார்.

கடந்த ஏப்ரல் 29-ஆம் தேதி, ஸ்னீத் தனது மாமியார் அருணாவைச் சந்தித்து, அவரைத் தனது இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றுள்ளார். பயணத்தின் போது இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த ஸ்னீத், தான் அணிந்திருந்த தலைக்கவசத்தால் (Helmet) அருணாவின் தலையில் பலமாகத் தாக்கியுள்ளார். இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த அருணாவுக்குப் பலத்த காயம் ஏற்பட்டது.

சம்பவத்திற்குப் பிறகு தனது மனைவிக்குத் தகவல் தெரிவித்த ஸ்னீத், அருணாவுக்குத் திடீரென வலிப்பு ஏற்பட்டதாகவும், அதனால் அவர் வாகனத்திலிருந்து கீழே விழுந்துவிட்டதாகவும் கூறி நாடகமாடியுள்ளார். உடனடியாக மீட்கப்பட்ட அருணா, அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக மற்றொரு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இருப்பினும், சிகிச்சை பலனின்றி ஏப்ரல் 30-ஆம் தேதி அருணா உயிரிழந்தார்.

 

அருணா கீழே விழுந்த விதத்தில் சந்தேகம் அடைந்த அவரது மகள், இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸார் அந்தப் பகுதியில் இருந்த சிசிடிவி (CCTV) காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், ஸ்னீத் தனது மாமியாரைத் தாக்கும் காட்சிகளும், ஹெல்மெட்டால் தலையில் அடிக்கும் காட்சிகளும் தெளிவாகப் பதிவாகியிருந்தன.

இதனையடுத்து போலீஸார் ஸ்னீத்தை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் குற்றத்தைச் ஒப்புக்கொண்டார். “அருணாவுக்கு வலிப்பு ஏற்பட்டுதான் விழுந்தார்” என்று அவர் கூறி வந்த பொய் அம்பலமானது. மேலும் தற்போது ஸ்னீத் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.