பரபரப்பான வணிக வீதியில் மழையில் நனைந்தபடி ஸ்கூட்டரைத் தள்ளிச் சென்ற இளைஞர், அறுந்து கிடந்த மின்கம்பியைத் தொட்டதால் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த அதிர்ச்சி வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அதாவது பெங்களூருவின் மிக முக்கியமான வணிகப் பகுதியான ‘கமர்ஷியல் ஸ்ட்ரீட்’ அருகே கடந்த ஏப்ரல் 29-ஆம் தேதி மாலை 6 மணியளவில் இந்த விபரீதம் நிகழ்ந்தது. அன்றைய தினம் பெய்த மழையால் சாலைகளில் தண்ணீர் தேங்கியிருந்தது. அப்போது இளைஞர் ஒருவர் தனது ஸ்கூட்டர் பழுதானதால், அதனை மழையில் நனைந்தபடி தள்ளிக் கொண்டு வந்துள்ளார். அவருக்கு உதவியாக அவரது மனைவியும் பின்னால் தள்ளியபடி வந்துள்ளார்.

அவர்கள் ஒரு திருப்பத்தில் திரும்ப முயன்றபோது, எதிர்பாராத விதமாக மின் கம்பத்தில் இருந்து அறுந்து தொங்கிக் கொண்டிருந்த  மின்கம்பியை அந்த இளைஞர் கவனிக்கவில்லை. ஸ்கூட்டரைத் தள்ளிய வேகத்தில் அவரது உடல் மின்கம்பியில் உரசியது. கண் இமைக்கும் நேரத்தில் மின்சாரம் உடல் முழுவதும் பாய்ந்ததில், அவர் நிலைகுலைந்து சாலையில் விழுந்து சம்பவ இடத்திலேயே துடிதுடிக்க உயிரிழந்தார்.

இதைப் பார்த்த அங்கிருந்த மக்கள் ஓடி வந்தனர். ஆனால், மின்கம்பி உடல் மீது கிடந்ததாலும், மழை நீர் தேங்கியிருந்ததாலும் யாராலும் அவரைத் தொட முடியவில்லை. உரிய உபகரணங்கள் இல்லாததால், மக்கள் வேடிக்கைப் பார்க்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர். இளைஞரைத் தொட முயன்றால் தங்களுக்கும் மின்சாரம் பாயும் என்ற அச்சத்தில் அவர்கள் தவித்தனர்.

இந்த ஒட்டுமொத்த சம்பவமும் அங்கிருந்த சிசிடிவி (CCTV) கேமராவில் பதிவாகியுள்ளது. மாநகராட்சி மற்றும் மின்சார வாரியத்தின் அலட்சியமே இந்த உயிரிழப்புக்குக் காரணம் எனப் பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.