தஞ்சை கீழவாசல் படைவெட்டி அம்மன் கோயில் தெருவில் வசித்து வந்தவர்கள் குப்புசாமி மற்றும் விவேக். இவர்கள் மீன் வெட்டும் தொழில் ஈடுபட்டு வந்துள்ளனர். தஞ்சை கீழவாசல் மீன் மார்க்கெட் எதிரில் டாஸ்மாக் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த டாஸ்மாக் கடையை ஒட்டி அனுமதி பெற்ற பார் இயங்கி வருகிறது. இந்நிலையில் நேற்று(மே 21) காலை டாஸ்மாக் கடை திறப்பதற்கு முன் நண்பகல் 12 மணிக்கு முன்பு பாரில் மது விற்பனை செய்யப்பட்டு உள்ளது. Black pearl என்ற பிராந்தியை குப்புசாமி மற்றும் விவேக் வாங்கி அருந்தியுள்ளனர்.

பிராந்தியை குடித்த சில நிமிடங்களில் இருவருக்கும் வாயில் நுரைதள்ளி வலிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் குப்புசாமி என்பவர் சம்பவ இடத்திலேயே இறந்ததாக தெரிவிக்கப்பட்டது. இதனிடையே உயிருக்கு ஆபத்தான நிலையில் விவேக் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

எனினும் விவேக் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து பார் உரிமையாளர் கள்ளச்சந்தையில் விற்பனை செய்த மது பாட்டில்கள் அடங்கிய பெட்டியை உடனே அங்கிருந்து அப்புறப்படுத்தி எடுத்துச்சென்றதாக கூறப்பட்டது. அவர்கள் இருவர் உயிரிழப்புக்கு காரணமான மதுவில் சயனைடு இருப்பது தெரியவந்துள்ளது எனவும் தடயவியல் ஆய்வுக்கு அனுப்பப்பட்டதில் சயனைடு இருப்பது உறுதியாகியுள்ளது எனவும் மாவட்ட ஆட்சியர் கருத்து தெரிவித்து உள்ளார்.