இறுதிப் போட்டி கொல்கத்தா மைதானத்திலோ, வான்கடே மைதானத்திலோ (மும்பையில்) நடந்திருந்தால் நாங்கள் வெற்றி பெற்றிருப்போம்” என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறினார்.

2023 உலகக் கோப்பையில் இந்தியா அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முதல் அணியாக சென்றது. ஆனால் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்திய அணி யாருமே எதிர்பார்க்காத வகையில் ஆஸ்திரேலிய அணியிடம் அதிர்ச்சி தோல்வியடைந்தது. இதனால் ஆஸ்திரேலியா அணி 6வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. 3வது முறை இந்தியா கோப்பை வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்திய ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

இந்நிலையில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, “உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் கொல்கத்தா அல்லது மும்பையில் நடந்திருந்தால் இந்தியா வென்றிருக்கும்” என்றார். நேதாஜி உள்விளையாட்டு அரங்கில் கட்சி தொண்டர்களிடம் பேசிய மம்தா, நாட்டின் கிரிக்கெட் அணியை காவி நிறமாக்கும் முயற்சிகள் நடப்பதாக குற்றம் சாட்டினார்.

மம்தா கூறுகையில், “அவர்கள் முழு நாட்டையும் காவி வண்ணம் பூச முயற்சிக்கிறார்கள். எங்கள் இந்திய வீரர்களைப் பற்றி நாங்கள் பெருமைப்படுகிறோம், மேலும் இறுதிப் போட்டி கொல்கத்தா அல்லது வான்கடே (மும்பையில்) நடந்திருந்தால் நாங்கள் உலகக் கோப்பையை வென்றிருப்போம் என்று நான் நம்புகிறேன்,” என்று அவர் கூறினார்.

மேலும் “அவர்கள் குங்குமப்பூ பயிற்சி ஜெர்சிகளை அறிமுகப்படுத்தி அணியை காவி நிறமாக்க முயன்றனர். வீரர்கள் எதிர்த்தனர், இதன் விளைவாக, அவர்கள் போட்டிகளின் போது அந்த ஜெர்சிகளை அணியவில்லை. பாவிகள் எங்கு சென்றாலும், அவர்கள் தங்கள் பாவங்களை எடுத்துச் செல்கிறார்கள். உலகக் கோப்பையில் பாவிகள் கலந்து கொண்ட போட்டியைத் தவிர மற்ற அனைத்துப் போட்டிகளிலும் இந்திய அணி சிறப்பாக விளையாடியது” என்று கூறினார். பிரதமர் நரேந்திர மோடியை மறைமுகமாக விமர்சித்த மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இவ்வாறு கூறினார்..