ராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளம் பகுதியை சேர்ந்த 20க்கும் மேற்பட்டவர்கள் வருடந்தோறும் தைப்பூச விழாவிற்கு பழனிக்கு பாதயாத்திரை செல்வது வழக்கம். இந்நிலையில் பனைக்குளம் பகுதியை அடுத்துள்ள அழகன்குளத்தை சேர்ந்த நம்புராஜன் – காளியம்மாள் தம்பதி உட்பட 20 பேர் பாதயாத்திரையாக பழனிக்கு சென்றனர்.

அங்கு சுவாமி தரிசனத்தை முடித்துவிட்டு டாட்டா எஸ் வேன் மூலமாக ஊருக்கு திரும்பினர். அப்போது இவர்கள் வந்து கொண்டிருந்த வேன் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது எதிரே ஏர்வாடியில் இருந்து புதுக்கோட்டை நோக்கி வந்து கொண்டிருந்த லாரி மீது வேன் மோதி விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் வேன் ஓட்டுநர் முகமது, தம்பதியரான நம்புராஜன் காளியம்மாள் ஆகியோர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்த தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஐந்து பேரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பலியானவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததோடு விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.