வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி மிர்பூரில் அனல் பறந்தது. ஆட்டத்தின் 38-வது ஓவரின் போது, பாகிஸ்தான் பேட்ஸ்மேன் முகமது ரிஸ்வானை நோக்கி வங்கதேச விக்கெட் கீப்பர் லிட்டன் தாஸ் வீசிய வார்த்தைகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. “பாகிஸ்தானில் ரிஸ்வானின் பெயர் ரொம்பவே டேமேஜ் ஆகிவிட்டது, அவர் மட்டும் பெரிய ஷாட் அடிக்க ஆசைப்பட்டு அவுட் ஆனால், அந்த நாட்டுக்குள் அவரால் கால் கூட வைக்க முடியாது” என்று லிட்டன் தாஸ் கிண்டல் செய்துள்ளார். இந்த ஆடியோ ஸ்டம்ப் மைக்கில் மிகத் தெளிவாகப் பதிவாகி சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது.

லிட்டன் தாஸின் கிண்டலுக்குப் பிறகு, ரிஸ்வான் வெறும் 15 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். பாகிஸ்தான் அணி எப்படியாவது போட்டியை டிரா செய்துவிடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நஹித் ராணாவின் அபாரமான 5 விக்கெட் வீச்சினால் பாகிஸ்தான் பேட்டிங் வரிசை அப்படியே சரிந்தது. இறுதியில் வங்கதேசம் 104 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. தோல்விக்குப் பிறகு பேசிய பாகிஸ்தான் கேப்டன் ஷான் மசூத், “வீரர்களை நீக்குவது மட்டும் தீர்வாகாது, நீண்ட இடைவெளிக்குப் பிறகு டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவது சவாலாக இருக்கிறது” என்று தனது வருத்தத்தைப் பதிவு செய்துள்ளார்.