கர்நாடக மாநிலம் பெங்களூருவில் தொழிலதிபர் ஒருவர் தனது விலை உயர்ந்த ‘போர்ஷே’ (Porsche) காரில் வந்து, சாலையில் இருந்த பள்ளத்தை சிமெண்ட் போட்டு மூடிய வீடியோ சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாக பரவி வருகிறது. இந்தியாவின் சிலிக்கான் வேலி என்று அழைக்கப்படும் பெங்களூருவில் சாலைப் பள்ளங்கள் என்பது தீராத பிரச்சனையாக இருந்து வருகிறது. இதனைச் சுட்டிக்காட்டவும், அதிகாரிகளின் கவனத்தை ஈர்க்கவும் அந்த நகரைச் சேர்ந்த ஒரு தொழிலதிபர் வினோதமான முறையில் தனது எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளார்.

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் அந்த வீடியோவில், தொழிலதிபர் ஒருவர் தனது பல கோடி ரூபாய் மதிப்புள்ள ‘போர்ஷே’ சொகுசு காரை ஒரு பெரிய சாலைப் பள்ளத்திற்கு அருகில் நிறுத்துகிறார். பின்னர், காரின் முன் பகுதியில் சிமெண்ட் மற்றும் மணலைப் பரப்பி, அதில் குடிநீர் பாட்டில்  நீரை ஊற்றிக் கலக்கிறார்.

 

தயார் செய்த அந்த சிமெண்ட் கலவையைக் கொண்டு சாலையில் இருந்த பள்ளத்தை அவர் மூடுவதைக் கண்டு அங்கிருந்த பொதுமக்கள் ஆச்சரியமடைந்தனர். சாலைப் பராமரிப்பில் அலட்சியம் காட்டும் மாநகராட்சி அதிகாரிகளைச் சாடும் வகையில் இந்தச் செயல் அமைந்துள்ளதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொகுசு காரையே சிமெண்ட் கலக்கப் பயன்படுத்தியது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. ஒரு தொழிலதிபரே இறங்கி வந்து பள்ளத்தை மூட வேண்டிய நிலையில் தான் சாலைகள் உள்ளனவா  எனப் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும் பெங்களூருவின் சாலை அவலத்தை உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ள இந்த வீடியோ, தற்போது இணையத்தில் ‘டிரெண்டிங்’ ஆகி வருகிறது.