சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ஜெயலலிதாவின் பிறந்தநாளில் சமுதாயத்திற்கு பயன்படும் விதமாக பல்வேறு நலத்திட்ட உதவிகள் மக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது. விளையாட்டு வீரர்களுக்கு அதிமுக 3 சதவீதம் இட ஒதுக்கீட்டை வழங்கியது. அதனைப் போல இட ஒதுக்கீடு போன்ற முக்கியத்துவத்தை அரசு வேலைகள் உள்ளிட்டவற்றில் திமுக அரசு வழங்கியுள்ளதா? விளையாட்டு வீரர்களை எந்த வகையில் திமுக ஊக்குவித்துள்ளது. சர்வதேச அளவில் விளையாட்டுப் போட்டிகளை மட்டும் நடத்திவிட்டால் போதாது. பர்மா பஜாரில் விற்கும் கோப்பையை வாங்கி ஸ்டாலினையும் சம்பந்தப்பட்ட அமைச்சரையும் ஏமாற்றியது எங்களுக்கு தெரியாதா என்ன? இதுதான் இந்த அரசின் சாதனை.

விளையாட்டு துறையை ஊக்குவிக்க அவர்கள் எதுவுமே செய்யவில்லை. கடந்த நான்கு ஆண்டுகளாக விளையாட்டுத்துறை அமைச்சராக பதவி வகித்த உதயநிதி என்ன திட்டங்களை தமிழகத்திற்காகவும் விளையாட்டு துறைக்காகவும் கொண்டு வந்தார் என்பதை வெளிப்படையாக கூற தயாரா. சமூக வலைத்தளங்களில் மட்டுமே திமுக அரசின் பிரச்சாரங்கள் நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் தமிழகத்தில் உயர்ந்து வரும் விலைவாசி குறித்து அல்லது சட்டம் ஒழுங்கு சீர்கேடு பற்றி திமுகவினர் வாய் திறப்பது கிடையாது. அரசுத் துறையில் லட்சக்கணக்கில் காலி பணியிடங்கள் உள்ள நிலையில் அதனை நிரப்புவதற்கு ஸ்டாலின் எந்த ஊரு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. திமுக மற்றும் பாஜக இருவரும் ஒரு புரிதலில் இருப்பதால் மக்களுடைய பிரச்சனைகள் குறித்து அவர்கள் பேசுவது கிடையாது என ஜெயக்குமார் காட்டமாக பேசியுள்ளார்.