புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பணம்பட்டி மருதாந்தலை பகுதியில் சாம்பசிவம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அ.தி.மு.க ஒன்றிய செயலாளராக இருக்கிறார். மேலும் சாம்பசிவம் அன்னவாசல் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலராகவும், நிலவள வங்கி தலைவராகவும் வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் அ.தி.மு.க மாநாட்டு முன் ஏற்பாடுகளை பார்ப்பதற்காக சாம்பசிவம் அ.தி.மு.க நிர்வாகிகள் சிலருடன் காரில் மதுரைக்கு சென்றார். அங்கு மாநாடு ஏற்பாடுகளை பார்த்துவிட்டு அன்று இரவே காரில் மீண்டும் ஊருக்கு வந்து கொண்டிருந்தார்.

வரும் வழியில் சாம்பசிவம் தனது மகனை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு காரை எடுத்துக்கொண்டு முத்துடையான் பட்டி அருகே இருக்கும் பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே வந்து விடுமாறு தெரிவித்தார். இதனால் அவரது மகனும் காரை எடுத்து தனது தந்தை கூறிய இடத்திற்கு வந்து நின்றார்.

இந்நிலையில் அ.தி.மு.க நிர்வாகிகளுடன் காரில் வந்து இறங்கிய சாம்பசிவம் தனது மகன் வந்த காரில் செல்வதற்காக புதுக்கோட்டை-திருச்சி சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் சாம்பசிவம் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இந்த விபத்தில் படுகாயமடைந்த சாம்ப சிவம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் அங்கு சென்று சாம்பசிவத்தின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் எம்.எல்.ஏ புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சென்றார். பின்னர் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு சாம்ப சிவத்தின் உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அதன் பிறகு முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் அவரது உடலுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தியுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.