பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு வந்த ஒரு பெண் திடீரென தர்ணாவில் ஈடுபட போவதாக தெரிவித்தார். அந்த பெண் கூறியதாவது, எனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து வாழ்ந்தேன். அப்போது எனக்கு லாரி டிரைவர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. அவர் என்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்தார். இதனையடுத்து எனது கணவரிடமிருந்து விவாகரத்து பெற்றால் என்னை திருமணம் செய்து கொள்வதாக அவர் உறுதி அளித்தார். அதனை நம்பி நானும் எனது கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்றேன்.

ஆனால் லாரி டிரைவர் என்னை திருமணம் செய்து கொள்ளாமல் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்ய உள்ளார். இதுகுறித்து கேட்டபோது லாரி டிரைவரும் அவரது குடும்பத்தினரும் என்னை தகாத வார்த்தையால் திட்டி கொலை மிரட்டல் விடுகின்றனர். அவர் மீதும், அவர் குடும்பத்தினர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பெண் கூறினார். அப்போது போலீசார் கூறியதாவது, ஏற்கனவே இது தொடர்பாக அந்த பெண் அளித்த புகார் மீது விசாரணை நடத்தி வருவதாக கூறினர். அதன் பிறகு அந்த பெண் அங்கிருந்து சென்றார். இந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.