கோவா கேசினோக்களுக்கு வரும் பெரும் பணக்காரர்களைத் தனது மோக வலையில் வீழ்த்தி, கொள்ளையடித்து வந்த மர்மப் பெண் ஒருவரைப் போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். உடுப்பியைச் சேர்ந்த வாட்டர் ஸ்போர்ட்ஸ் தொழிலதிபர் சந்தீப் சலாயம் (42) என்பவர், கோவாவில் உள்ள ஒரு ரிசார்ட் அறையில் சந்தேகத்திற்கிடமான முறையில் இறந்து கிடந்தார். இந்த கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய பெண் குற்றவாளியான மங்களூரைச் சேர்ந்த அக்ஷதா (35) என்பவரை, போலீசார் பெங்களூரில் வைத்து கைது செய்துள்ளனர். தொழிலதிபர் சந்தீப் இறந்த விஷயம் தெரியாமல், அக்ஷதா தனது மொபைல் போனை ஆன் செய்து வைத்திருந்ததே அவர் போலீசாரிடம் சிக்கியதற்கான முக்கிய திருப்புமுனையாக அமைந்துள்ளது. அந்த மொபைல் போன் சிக்னல் லொகேஷனை வைத்தே போலீசார் அவரது இருப்பிடத்தைக் கண்டுபிடித்துள்ளனர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையின்படி, அக்ஷதா தொழிலதிபர் சந்தீப்பை சொகுசு ரிசார்ட் அறைக்கு வரவழைத்து, அங்கு அவருக்கு ஏதோ ஒரு மயக்க மருந்து அல்லது போதைப்பொருளைக் கொடுத்துள்ளார். இதனால் சந்தீப் சுயநினைவை இழந்ததைத் தொடர்ந்து, அவர் கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலி மற்றும் பணப்பை ஆகியவற்றைத் திருடிக்கொண்டு அக்ஷதா அங்கிருந்து தப்பியோடியுள்ளார். ஆனால், அந்த நச்சு மருந்தின் வீரியத்தால் சந்தீப் அறையிலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். சந்தீப் இறந்த பிறகு அக்ஷதா பெங்களூருக்கு தப்பிச் சென்றதை அறிந்த போலீசார், தனிப்படை அமைத்து 3 நாட்கள் இரவு பகலாகத் தேடி அவசரப் பிரிவில் அக்ஷதாவை மடக்கிப் பிடித்தனர். கோவா அழைத்து வரப்பட்டுள்ள அக்ஷதாவிடம், சந்தீப்புக்குக் கொடுத்த மருந்து எது? இதன் பின்னணியில் ஏதேனும் பெரிய நெட்வொர்க் கும்பல் செயல்படுகிறதா? என்பது குறித்து மாப்ஸா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின் போலீசார் தீவிர விசாரணை நடத்தவுள்ளனர்.
