கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள நரசிம்மநாயக்கன் பாளையத்தில் மனோகர் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி தொழிலாளி. இவருக்கு ரேணுகா (45) என்ற மனைவி இருந்துள்ளார். இவர் அங்குள்ள ஒரு தனியார் மில்லில் வேலை பார்த்து வந்த நிலையில் இந்த தம்பதிகளுக்கு 2 மகள்கள் இருக்கிறார்கள். இந்நிலையில் மனோகர் நேற்று தன்னுடைய இரு மகள்களுடன் வெளியே சென்ற நிலையில் மதியம் 3:30 மணியளவில் வீட்டிற்கு திரும்பினார். அப்போது வீடு திறந்த நிலையில் கிடந்ததோடு ரத்த வெள்ளத்தில் அவருடைய மனைவி வீட்டிற்குள் பிணமாக கிடந்தார்.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மனோகர் பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து ரேணுகாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கொலை செய்துவிட்டு 3 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து விட்டு சென்றது தெரிய வந்தது. இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகிறார்கள். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது