கடந்த ஜனவரி 24-ஆம் தேதி அமெரிக்காவைச் சேர்ந்த ஹண்டன்பர்க் நிறுவனம் ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் பங்குச்சந்தையில் தனது பங்குகளின் மதிப்பை உயர்த்தி காட்டுவதற்காக அதானி குழுமம்  மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக கூறப்பட்டுள்ளது. இதன் விளைவாக கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாக அதானி உலக பணக்காரர் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருந்து 15 -வது இடத்திற்கு சென்றுள்ளார். இந்நிலையில் அதானி எண்டர்பிரைசஸ் 28.45 சதவீதம், அதானி போர்ட்ஸ் 19.69 சதவீதம், அதானி போட்டல் கேஸ் 10 சதவீதம், அம்புஜா சிமெண்ட் 16.56 சதவீதம், அதானி கிரீன் எனர்ஜி 5.78 சதவீதம் பங்குகள் அடிவாங்கிய நிலையில் ரூ.19.20 லட்சம் கோடியாக இருந்த பங்குகள் தற்போது ரூ.11.76 லட்சம் கோடியாக சரிந்துள்ளது.

இதனால் கடந்த ஐந்து நாட்களில் மட்டும் அதானி குடும்பத்திற்கு ரூ.7.44 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இது அதானி குடும்பத்தின் மொத்த சொத்து மதிப்பில் மூன்றில் ஒரு பங்காகும். இந்நிலையில் அதானி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதாவது வீடியோ மூலம்  அளித்துள்ள விளக்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது, “இழப்புகளிலிருந்து முதலீட்டாளர்களை காப்பதற்காகவே பங்கு விற்பனை ரத்து செய்யப்பட்டது எனவும் பங்கு விற்பனை ரத்து  முடிவால் நிறுவனத்தின் எதிர்கால திட்டங்களில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என அதானி தரப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும் பங்குச் சந்தைகளில் காணப்பட்ட ஏற்ற இறக்கத்தால் எப்.பி.ஓவை தொடர்வது சரியானது அல்ல என முடிவெடுத்துள்ளோம்” என தெரிவித்துள்ளார்.