சினிமா நடிகர் மற்றும் டிக் டாக் பிரபலம் டான்சர் ரமேஷ். இவர் நடிகர் அஜித்தின் துணிவு படத்தில் ஒரு சிறிய ரோலில் நடித்துள்ளார். இவர் நேற்று சென்னை புளியந்தோப்பில் உள்ள கேபி பார்க் குடியிருப்பின் 10-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இவர் மாடியில் இருந்து கீழே குதித்த நிலையில் அவர் குதித்த இடத்தில் ரத்தம் எதுவும் இல்லை என அப்பகுதி மக்கள் சந்தேகம் எழுப்பி உள்ளனர். பத்தாவது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்ட ஒருவரின் ரத்தம் எதுவும் கீழே இல்லாததால் டான்சர் ரமேஷ் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று கூறுகிறார்கள். இந்நிலையில் டான்சர் ரமேஷுக்கு இரண்டு மனைவிகள் இருக்கும் நிலையில் முதல் மனைவி சித்ராவுக்கு இரண்டு மகள்கள் இருக்கிறார்கள்.

அதன் பிறகு இரண்டாவது மனைவி இன்பவள்ளி என்பவருடன் கேபி பார்க் குடியிருப்பில் டான்சர் ரமேஷ் வாழ்ந்து வந்த நிலையில், நேற்று அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு முதல் மனைவி மற்றும் மகள்களை பார்ப்பதற்கு செல்வதாக டான்சர் ரமேஷ் இரண்டாவது மனைவியிடம் கூறியுள்ளார். ஆனால் இரண்டாவது மனைவி முதல் மனைவியை சந்திக்க செல்லக்கூடாது என கூறி தன்னுடைய கணவரிடம் சண்டை போட்டதாக கூறப்படுகிறது. இந்த சண்டை நடைபெற்ற சிறிது நேரத்தில் தான் டான்சர் ரமேஷ் மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. மேலும் இதுகுறித்து முதல் மனைவி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.