இந்திய சுதந்திரப் போராட்டத்தின் வரலாற்றில் தனித்துவமான இடம் பெற்ற லெப்டினன்ட் ஆஷா சஹாய் (97) பாட்னாவில் காலமானார். ஜப்பானில் பிப்ரவரி 2, 1928 அன்று பிறந்த இவர், நேதாஜி சுபாஷ் சந்திரபோசால் ஈர்க்கப்பட்டு 17-ஆம் வயதில் இந்திய தேசிய ராணுவத்தின் (INA) ஜான்சி ராணி படைப்பிரிவில் சேர்ந்தார்.
‘லெப்டினன்ட் ஆஷா சஹாய்’ என்ற போர்க்காலப் பெயரில் அறியப்பட்ட இவர், இந்திய சுதந்திரத்திற்காக ஆங்கிலேயர்களுக்கு எதிராக ஆயுதம் ஏந்திய வீராங்கனை ஆவார். செவ்வாய்க்கிழமை இரவு பாட்னாவின் ஸ்ரீ கிருஷ்ணாபுரி பகுதியில் உள்ள தனது மகனின் இல்லத்தில் அவர் காலமானார்.

ஆஷா சஹாயின் மகன் சஞ்சய் சவுத்ரி, “சமீபத்திய உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட என் தாயார் ஆகஸ்ட் 12-ம் தேதி இரவு 11.55 மணிக்கு குடும்பத்தினர் முன்னிலையில் அமைதியாக காலமானார். இன்று மாலை தகனம் நடைபெறும்” என்று தெரிவித்துள்ளார். அவரது மறைவுக்கு இந்தியாவுக்கான ஜப்பான் தூதர் கெய்ச்சி ஓனோவும், நேதாஜியின் மகள் அனிதா போஸ் பஃபாஃப்பும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

ஆஷா சஹாய் தனது கணவர் டாக்டர் எல்.பி. சவுத்ரி, மகன் மறைந்த கேப்டன் பிரவீர் சவுத்ரி ஆகியோரை இழந்த நிலையில், தற்போது தனது மருமகள், பேரன்கள், கொள்ளுப் பேரன்கள் ஆகியோரை விட்டுச் சென்றுள்ளார்.
இரண்டாம் உலகப் போரின் போது ஜப்பானில் வளர்ந்த அவர், டோக்கியோவில் கல்வி கற்றார். 15 வயதில் முதன்முதலில் நேதாஜியை சந்தித்த இவர், பின்னர் பாங்காக்கில் ஜான்சி ராணி படைப்பிரிவில் லெப்டினன்ட்டாக பணியாற்றினார். நேதாஜி இறுதி முறையாக 1945 ஆம் ஆண்டு தைவானில் விமான விபத்தில் உயிரிழப்பதற்கு முன்பு, அவரை நேரில் சந்தித்த அனுபவம் ஆஷா சஹாய்க்கு இருந்தது.

1946-ஆம் ஆண்டு இந்தியா திரும்பிய அவர், தனது தந்தையுடன் சேர்ந்து நாடு முழுவதும் பயணம் செய்து INA வீரர்களின் தியாகத்தை மக்களிடம் எடுத்துரைத்தார். சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்தத் தியாகியின் மறைவு, இந்தியாவுக்கு பெரிய இழப்பாகக் கருதப்படுகிறது.
