பெங்களூருவில் உள்ள பாலகெரே-பனத்தூர் சாலையில் நேற்று  காலை சுமார் 20 குழந்தைகளை ஏற்றிச் சென்ற பள்ளிப் பேருந்து சாலையில் ஏற்பட்டிருந்த ஆழமான பள்ளத்தில் சிக்கிக்கொண்டது. பேருந்து மிதமான வேகத்தில் சென்றதால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. மாணவர்கள் அனைவரும் அவசர வெளியேற்ற வழியாக பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பான  காணொளி சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காணொளியில், மழைநீர் நிரம்பிய பள்ளத்தில் ஒரு சக்கரம் சிக்கி, பேருந்து ஒரு பக்கம் ஆபத்தான முறையில் சாயும் காட்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. சம்பவத்திற்குப் பிறகு, சில மாணவர்கள் வேறொரு பேருந்தில் பள்ளிக்கு அனுப்பப்பட்டனர். மற்றவர்களை அருகிலிருந்த பொதுமக்கள் பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர்.

 

இந்த நிகழ்வுக்குப் பின், உள்ளூர் வாசிகள் கடும் கோபம் தெரிவித்தனர். “பலமுறை புகார் அளித்தும், சாலையின் நிலை குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை,” என அவர்கள் கூறினர். சாலையோரத்தில் தோண்டப்பட்ட வடிகால் பணிகள் நீண்ட நாட்களாக நிறைவு செய்யப்படாமலேயே விடப்பட்டுள்ளதாகவும், மழைக்காலங்களில் சாலைகள் முற்றிலும் பள்ளங்களால் நிரம்பி விடுவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

சமீபத்தில், கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமார், “பெங்களூரு நகரில் சுமார் 10,000 பள்ளங்கள் உள்ளன” என்று கூறியிருந்தார். இது, நாட்டின் ஐ.டி. தலைநகரின் சாலைகள் எவ்வளவு மோசமான நிலையில் உள்ளன என்பதைக் காட்சிப்படுத்துகிறது.

இந்தப் பள்ளங்கள் பசுமையாக இல்லாமல், பெரும்பாலான விபத்துகளுக்கும் காரணமாகின்றன. சில சமயங்களில் பயணிகள் உயிரிழப்பும் ஏற்படுகிறது. இதற்கு சமீபத்திய எடுத்துக்காட்டு, கூலூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில், 44 வயதான மங்களூரு பெண் ஒருவர், இருசக்கர வாகனத்தில் பயணிக்கும்போது, பள்ளத்தில் சிக்கி கீழே விழுந்து, பின்னர் ஓடிக்கொண்டிருந்த லாரி மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. மேலும் இந்த சம்பவங்கள் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.