உத்தரப்பிரதேசம் மாநிலம் நொய்டா எக்ஸ்டென்ஷன் பகுதியில் உள்ள சென்டூரியன் பார்க் டெரஸ் ஹோம்ஸ்  என்னும் அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில், உணவை டெலிவரி செய்ய வந்த நபரைச் செக்யூரிட்டி தடுத்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. ஆன்லைனில் ஆர்டர் செய்த உணவு வருவதில் தாமதம் ஏற்பட்டதால் ஆத்திரமடைந்த பெண் ஒருவர், திடீரென நுழைவுவாயிலுக்கு வந்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்களுடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இந்தச் சண்டை வெறும் வார்த்தைப் போராக நில்லாமல் விவரிக்க முடியாத அளவுக்கு மீறிச் சென்றுள்ளது. அங்கிருந்த காவலாளிகளை ஒரு பொருட்டாக மதிக்காமல் பேசிய அந்தப் பெண், “உன்னை என் செருப்பைக் கொண்டு சுத்தப்படுத்த வைப்பேன்” என்று கடும் மிரட்டல் விடுத்துள்ளார். அதுமட்டுமின்றி, நாற்காலியில் அமர்ந்திருந்த ஒரு ஊழியரை நோக்கி எத்துவது போன்றும், மற்றொரு ஊழியரைத் தாக்கும் வகையிலும் கைகளை நீட்டியுள்ள காட்சி அங்கிருந்த சிசிடிவி மற்றும் செல்போன் கேமராவில் பதிவாகியுள்ளது.

சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வரும் இந்த வீடியோவால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளதுடன், நெட்டிசன்கள் அந்தப் பெண்ணின் அநாகரிகமான செயலையும் திமிர்த்தனமான பேச்சையும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இதற்கிடையில், இந்தச் சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த பிஸ்ராக் (Bisrakh) காவல் நிலையப் போலீசார், வைரலாகும் காட்சிகளை வைத்துக்கொண்டு விசாரணை நடத்தி வருவதுடன், சம்பந்தப்பட்டவர்கள் மீதான சட்டப்பூர்வ நடவடிக்கைகளுக்கும் தயாராகி வருகின்றனர்.