டெல்லி கீழமை  நீதிமன்ற நீதிபதி அமன் குமார் ஷர்மா (30), சப்தர்ஜங் பகுதியில் உள்ள தனது இல்லத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். குடும்பத் தகராறு மற்றும் மன உளைச்சலே இதற்குக் காரணம் என அவரது உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சனிக்கிழமை இரவு 10 மணியளவில், நீதிபதி அமன் குமார் தனது தந்தையைத் தொலைபேசியில் அழைத்து, தான் மிகுந்த மன உளைச்சலில் இருப்பதாகவும், மேற்கொண்டு வாழப் பிடிக்கவில்லை என்றும் கூறி அழுதுள்ளார். உடனே அவரது தந்தை  ராஜஸ்தானிலிருந்து நள்ளிரவே டெல்லிக்கு விரைந்துள்ளார்.

மறுநாள் காலை வீட்டில் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், நீண்ட நேரமாக அமன் குமாரைக் காணவில்லை. அவரது போன் பாத்ரூம் உள்ளே ஒலித்துக் கொண்டிருந்தது. கதவு உட்புறமாகப் பூட்டப்பட்டிருந்ததால், பாதுகாவலர் ஜன்னலை உடைத்து உள்ளே சென்றபோது, அமன் குமார் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டார். உடனடியாக சப்தர்ஜங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அவரை, மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக அறிவித்தனர்.

அமன் குமாரின் மரணத்திற்கு அவரது மனைவி மற்றும் மனைவியின் சகோதரிதான் காரணம் என அவரது உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர். அமன் குமாரின் மனைவியின் சகோதரி வீட்டின் அதிகாரத்தைக் கையில் எடுத்துக்கொண்டு, கடந்த இரண்டு மாதங்களாக அமன் குமாரைத் துன்புறுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. மகனைக் காப்பாற்ற வந்த அவரது தந்தையை நோக்கி, “இங்கிருந்து உடனே கிளம்பாவிட்டால் போலீஸை அழைப்பேன்” என மருமகள் மிரட்டியதாகவும், சம்பந்திகளின் போன் எண்கள் பிளாக் செய்யப்பட்டதாகவும் உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2018-ல் புனே சிம்பயோசிஸ் சட்டப் பள்ளியில் படிப்பை முடித்த அமன் குமார் ஷர்மா, ஜூன் 19, 2021 அன்று டெல்லி நீதித்துறை சேவையில் சேர்ந்தார். திறமையான நீதிபதியாக அறியப்பட்ட அவர், கடந்த 2025 அக்டோபர் 18 முதல் கர்கர்டூமா நீதிமன்றத்தில் மாவட்ட சட்டப் பணிகள் ஆணையத்தின் (DLSA) முழுநேர செயலாளராகப் பணியாற்றி வந்தார். தற்போது டெல்லி போலீஸார் இந்த மரணம் குறித்து வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.