அமெரிக்க நாடாளுமன்றக் குழு கூட்டத்தின் போது, போருக்கு எதிராகப் போராட்டம் நடத்திய முன்னாள் ராணுவ வீரருக்கும், செனட்டர் (நாடாளுமன்ற உறுப்பினர்) ஷீஹி-க்கும் இடையே ஏற்பட்ட மோதலில், அந்த வீரரின் கை உடைந்ததாகக் கூறப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க ஆயுதப்படை தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில், வட கரோலினா மாநிலத்தைச் சேர்ந்த ‘கிரீன் பார்ட்டி’ வேட்பாளரும், முன்னாள் அமெரிக்க கடற்படை வீரருமான பிரையன் மெக்கின்னிஸ் என்பவர் திடீரென நுழைந்து போராட்டத்தில் ஈடுபட்டார். “இஸ்ரேலுக்காகப் போரிட யாரும் விரும்பவில்லை” என்று கோஷமிட்ட அவரை, பாதுகாப்பு அதிகாரிகள் அங்கிருந்து அகற்ற முயன்றனர்.

அப்போது, அதிகாரிகளின் பிடியில் இருந்து தப்பிக்க மெக்கின்னிஸ் கதவை பலமாகப் பிடித்துக் கொண்டு கூச்சலிட்டார். நிலைமை மோசமடைந்ததைக் கண்ட செனட்டர் ஷீஹி, அந்தப் போராட்டக்காரரை அப்புறப்படுத்த அதிகாரிகளுக்கு உதவினார். இந்த மோதலின் போது, மெக்கின்னிஸின் கை பலமாகப் பிதுக்கப்பட்டதில் அவர் வலியால் துடித்தார். கூட்டத்தில் இருந்தவர்கள், “ஐயோ! அவர் கை… ஒரு செனட்டர் முன்னாள் ராணுவ வீரரின் கையையே உடைத்துவிட்டார்” என அதிர்ச்சியுடன் கத்துவது வீடியோவில் பதிவாகியுள்ளது.

 

இந்தச் சம்பவம் குறித்து எக்ஸ் (X) தளத்தில் விளக்கமளித்துள்ள செனட்டர் ஷீஹி: “பாதுகாப்பு அதிகாரிகள் கட்டுப்படுத்த முடியாத ஒரு போராட்டக்காரரை அப்புறப்படுத்த நான் உதவி செய்தேன். நிலைமையைத் தணிக்கவே நான் முயன்றேன். மோதல் நோக்கத்துடனேயே அவர் அங்கு வந்திருந்தார். வன்முறையைத் தவிர்த்து அவர் உரிய சிகிச்சைப் பெறுவார் என நம்புகிறேன்,” என்று குறிப்பிட்டுள்ளார்.

கையை இழந்ததாகக் கூறப்படும் மெக்கின்னிஸ், 2003-ம் ஆண்டு ஈராக் போரில் பங்கேற்ற அனுபவம் கொண்ட முன்னாள் ராணுவ வீரர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, செனட்டர் ஷீஹி அங்கிருந்து வெளியேறும்போது பொதுமக்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோவும் வைரலாகி வருகிறது. மேலும் தற்போது அமெரிக்காவிலும், சமூக வலைதளங்களிலும் இந்தச் சம்பவம் பெரும் விவாதப் பொருளாகியுள்ளது. முன்னாள் ராணுவ வீரருக்கு ஆதரவாகப் போர் எதிர்ப்பு அமைப்புகள் குரல் கொடுத்து வருகின்றனர்.