“கள ஆய்வில் முதல்வர்” திட்டத்தின் கீழ் சேலம் மாவட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு பணிகளை மேற்கொண்டுள்ளார். அந்த வகையில் சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் சட்டம் -ஒழுங்கு நிலவரம் குறித்து இன்று மாலை அவர் ஆய்வு மேற்கொண்டார். இதில் வே.இறையன்பு, தமிழக காவல்துறை தலைவர் சைலேந்திரபாபு,  ஏடிஜிபி சங்கர் ஆகியோரும் கலந்து கொண்டனர். இந்த ஆய்வு கூட்டம் சுமார் மூன்று மணி நேரம் நடைபெற்று உள்ளது. இதன் பின் காவல்துறையினர் இடையே உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது, “காவல்துறையினர் போதைப் பொருட்களை அழிக்க முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

போதை பொருட்கள் கடத்தல் சம்பவங்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் அதேபோல் மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் எதிர்காலத்தை சீரழிக்கின்ற போதைப் பொருட்கள் புழக்கத்தை முற்றிலும் தடுப்பதற்கு காவல்துறையினர் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். பொதுமக்கள், வணிகர்களிடையே போதை பொருள் குறித்து விழிப்புணர்வை காவல் துறையினர் ஏற்படுத்த வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். மேலும் எந்த சூழலிலும் ஜாதி கலவரங்கள் ஏற்படாதவாறு கண்காணிக்க வேண்டும். குற்ற சம்பவங்களை தடுக்க காவல்துறையினர் மற்றும் வருவாய் துறையுடன் இணைந்து செயல்பட வேண்டும். நம் பணி மக்களுக்கானது என்ற ஒரே இலக்கை உணர வேண்டும்” என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.