இந்தியாவின் மிக பாதுகாப்பான நகரங்களில் ஒன்றாகக் கருதப்படும் மும்பையில், பெண் பயணி ஒருவரிடம் ஆட்டோ ஓட்டுநர் மிக மோசமான முறையில் பாலியல் ரீதியாகப் பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பெண் ஆட்டோவை விட்டு இறங்கும்போது, அந்த ஓட்டுநர் அவரிடம் அநாகரிகமான வார்த்தைகளைப் பயன்படுத்தி வற்புறுத்தியது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியாகப் பகிரப்பட்டு, பின்னர் எக்ஸ் (X) தளத்தில் வைரலானது. பெண்களின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கும் இந்தச் சம்பவத்தின் வீடியோ ஆதாரத்துடன் நெட்டிசன்கள் பலரும் மும்பை காவல்துறையைக் டேக் செய்து, அந்த ஓட்டுநர் மீது உடனடியாகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

சமூக வலைத்தளங்களில் எழுந்த கடுமையான கண்டனங்களைத் தொடர்ந்து, மும்பை காவல்துறை உடனடியாக இதில் தலையிட்டுள்ளது. குற்றச்சாட்டைப் பதிவிட்ட நபரைத் தொடர்புகொண்டு, அவரிடமிருந்து கூடுதல் விவரங்களைப் பெற்று விசாரணையைத் தொடங்கியுள்ளனர். இதனிடையே, “வியூஸ்காக அந்தப் பெண் திட்டமிட்டு ஆட்டோ ஓட்டுநரைப் பேச வைத்து நாடகமாடுகிறார்” என்றும், “அந்த வீடியோ போலியானது” என்றும் சமூக வலைத்தளங்களில் ஒரு தரப்பினர் கிளப்பி வரும் வதந்திகளுக்கு இதுவரை எந்தவித அதிகாரப்பூர்வ ஆதாரமும் இல்லை. பெண்களின் மனநிலையைப் பாதிக்கும் இதுபோன்ற அநாகரிகச் செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.