10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை நடிகர் விஜய் ஜூன் 3ம் தேதி சந்திக்கிறார்.

தமிழ் சினிமாவில் மிகப் பெரும் உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகர் விஜய் சில வருடங்களாகவே அரசியல் தொடர்பான ஆலோசனை கூட்டங்கள், நலத்திட்ட உதவிகள் போன்றவற்றை தன்னுடைய ரசிகர் மன்றம் வாயிலாக தொடர்ந்து செய்து வருகிறார். சினிமாவில் மட்டும் அரசியல் பேசி வந்த விஜய் அவருடைய மன்றத்தினரை மெல்ல மெல்ல தேர்தல் களத்திலும் இறக்கி ஆழம் பார்த்து வந்தார். இப்போது அரசியலில் முழுவதுமாக இறங்குவதற்காகவா என்னவோ முதற்கட்டமாக மக்கள் நல பணிகளை செய்யுமாறு மன்றத்தினரை முடுக்கி விட்டுள்ளார்.

விஜய் மக்கள் இயக்கம் சார்பாக உலக பட்டினி தினத்தை ஒட்டி நேற்று தமிழகம் முழுவதும் உணவு வழங்கும் நிகழ்ச்சியானது நடைபெற்றது. இந்த நிலையில் நடிகர் விஜய் ஜூன் 22ஆம் தேதி பிறந்த நாளை கொண்டாட இருக்கிறார். அதற்கு முன்னதாக சென்னை மதுரவாயலில் உள்ள  தனியார் மண்டபத்தில் நடக்க இருக்கும் இச்சந்திப்பில், தொகுதிக்கு 6 மாணவர்கள், 2 பெற்றோர்கள் என 234 தொகுதியை சேர்ந்தவர்கள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி மாணவர்கள், பெற்றோர்கள் உட்பட சுமார் 6000 பேர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.