ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் உள்ள சுந்தர்படா பகுதியில், ஒரு குடியிருப்பு கட்டிடத்தின் மொட்டை மாடியில் நடந்த பயங்கர வெடிவிபத்து குறித்து தேசிய புலனாய்வு முகமை (NIA) விசாரணையைத் தொடங்கியுள்ளது. கடந்த ஜனவரி 27-ஆம் தேதி நடந்த இந்த விபத்தில், தண்ணீர் டேங்கிற்குப் பின்னால் திடீரென நெருப்புப் பிழம்புகள் தோன்றி வெடித்த சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வெடிவிபத்தில் பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த முக்கிய குற்றவாளி ஷாநவாஸ் மாலிக் மற்றும் அவரது தாய் ஆகிய இருவர் உயிரிழந்துள்ளனர். மேலும் இருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

​முதற்கட்ட விசாரணையில், இது விபத்து அல்ல என்றும், அந்த மாடியில் சட்டவிரோதமாக நாட்டு வெடிகுண்டுகள் தயாரிக்கப்பட்டதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. சம்பவ இடத்திலிருந்து வெடிமருந்துகளைக் கைப்பற்றிய போலீசார், இது ஒரு பெரிய குற்றச் செயலுக்கான திட்டமாக இருக்கலாம் என சந்தேகிக்கின்றனர். வழக்கின் தீவிரத்தை கருத்தில் கொண்டு, உள்ளூர் போலீசாரிடமிருந்து விசாரணையை என்.ஐ.ஏ (NIA) தனது கட்டுப்பாட்டிற்குள் எடுத்துள்ளது. மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதியில் வெடிமருந்துகள் சேமித்து வைக்கப்பட்டிருந்த விவகாரம், ஒடிசாவில் பெரும் பாதுகாப்பு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.