சென்னை மாவட்டத்தில் உள்ள மேற்கு தாம்பரம் மாந்தோப்பு கிணற்று திரு பகுதியில் விக்னேஷ்(27) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். கடந்த மாதம் 11-ம் தேதி விக்னேஷுக்கு காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஆர்த்தி(22) என்பவருடன் திருமணம் நடைபெற்றது. திருமணத்தின் போது ஆர்த்தியின் பெற்றோர் தங்களது மகளுக்கு 80 பவுன் நகை போட்டனர். திருமணமாகும் போது ஆர்த்தி தனியார் பல்கலைக்கழகத்தில் எம்.காம் படித்து வந்துள்ளார்.

இந்நிலையில் கல்லூரியில் முதலாம் ஆண்டு கட்டணம் செலுத்தாததால் கடிதம் எழுதி கேட்டுள்ளனர். எனவே கடிதத்தை எழுதிக் கொடுத்துவிட்டு வருவதாக விக்னேஷிடம் கூறிவிட்டு கடந்த மூன்றாம் தேதி ஆர்த்தி வெளியே சென்றார். அதன் பிறகு அவர் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் ஆர்த்தியை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். ஆனாலும் அவரை கண்டுபிடிக்க இயலவில்லை. இதனையடுத்து விக்னேஷ் வீட்டிற்கு வந்து பார்த்தபோது 80 பவுன் நகையுடன் ஆர்த்தி மாயமானது தெரியவந்தது.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணை முதற்கட்ட விசாரணையில் திருமணத்திற்கு முன்பு ஆர்த்தி ஆகாஷ் என்பவரை காதலித்தது தெரியவந்தது. ஆகாஷின் வீடும் பூட்டி கிடந்தது. அவரது பெற்றோர் உட்பட அனைவரும் தலைமறைவாகிவிட்டனர். அவர்களது செல்போன் எண்ணும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. எனவே ஆகாஷ் ஆர்த்தியை அழைத்து சென்றிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான 22 நாளில் புதுப்பெண் 80 பவுன் நகையுடன் மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.