சேலம் மாவட்டத்தில் உள்ள ஏற்காடு செந்திட்டு கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும், மோட்டூர் கிராமத்தைச் சேர்ந்த வாலிபருக்கும் நேற்று திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தில் கலந்து கொள்வதற்காக மணப்பெண்ணின் உறவினர்கள் 23 பேர் சரக்கு வேனில் மோட்டூர் கிராமத்திற்கு சென்றனர். அந்த வேனை சுப்பிரமணி என்பவர் ஓட்டி சென்றார். திருமணம் முடிந்து அவர்கள் மீண்டும் ஊருக்கு வந்து கொண்டிருந்தனர்.

இந்நிலையில் வாழவந்தி கிரையத்தை தாண்டி ஆத்துப்பாலம் பகுதியில் சென்ற போது வேனின் ஆக்சல் உடைந்ததால் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலையோரம் இருந்த மரத்தில் மோதியது. இந்த விபத்தில் வெங்கடேஷ், பழனியம்மாள், ராணி, ஆண்டி, சுப்பிரமணி உள்பட 13 பேர் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று படுகாயமடைந்த 13 பேரையும் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.