கடலூர் மாவட்டத்தில் உள்ள ராமநத்தம் பகுதியில் 24 வயதுடைய வாலிபர் வசித்து வருகிறார். இவருக்கும் பெரம்பலூரை சேர்ந்த ஒரு கல்லூரி மாணவிக்கும் திருமணம் நடத்த பெற்றோர் முடிவு செய்தனர். நேற்று காலை ராமநத்தத்தில் இருக்கும் மண்டபத்தில் திருமணம் நடைபெறுவதாக இருந்தது. இதற்காக மண்டபத்தில் உறவினர்கள் கூடியிருந்தனர்.  இந்நிலையில் 18 வயது பூர்த்தியாகாத மாணவிக்கு திருமணம் நடைபெற இருப்பதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு புகார் தெரிவிக்கப்பட்டது.

இதனால் மாவட்ட ஆட்சிய அலுவலக அதிகாரிகள் ராமநத்தம் காவல் நிலையத்தை தொடர்பு கொண்டு விசாரணை நடத்த உத்தரவு பிறப்பித்தனர். அதன்படி போலீசார் திருமண மண்டபத்திற்கு சென்று தாலி கட்டுவதற்காக வாலிபர் தயார் நிலையில் இருந்த சமயத்தில் மாணவியின் சான்றிதழ்களை வாங்கி பார்த்தனர். அப்போது மாணவிக்கு 18 வயது பூர்த்தியடைய இன்னும் நான்கு மாதங்கள் இருப்பது தெரியவந்தது.

இதனால் போலீசார் திருமணத்தை தடுத்து நிறுத்தி 18 வயது பூர்த்தியாவதற்கு முன்பு திருமணம் செய்து வைப்பது சட்டப்படி குற்றம், மீறி திருமணம் செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர். அதன் பிறகு மணமகன் மற்றும் மாணவியின் பெற்றோரிடம் மாணவிக்கு 18 வயது பூர்த்தியாகாமல் திருமணம் செய்து வைக்க மாட்டோம் என எழுதி வாங்கிக் கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.