அக்ரா தாஜ்மஹால் வளாகத்தில் நேற்று ஒரு அதிர்ச்சிக்கான சம்பவம் நிகழ்ந்தது. மும்பையைச் சேர்ந்த குடும்பம் ஒருவர் தங்கள் வயதான தந்தையை காருக்குள் பூட்டி விட்டுவிட்டு சுற்றுலா சென்றனர். அவர் காப்பாற்றப்பட்ட சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தாஜ்மஹாலின் மேற்கு வாயிலில் உள்ள வாகன நிறுத்துமிடத்தில் பணியாற்றும் காவலர் ஒருவர், வாகனத்தின் உள்ளே ஒருவர் தவிக்கின்ற குரலை  கேட்டதையடுத்து காரின் அருகே சென்று பார்த்தார்.

கண்ணாடி வழியாக பார்த்ததில், ஒருவர் துணியால் கைகளை கட்டப்பட்ட நிலையில் சோர்ந்த நிலையில் கிடப்பது தெரியவந்தது. உடனே சுற்றுலா பார்வையாளர்களின் உதவியுடன் கண்ணாடியை உடைத்து ஹரியோம் தண்டேலே என்பவரை வெளியே எடுத்தனர்.

அந்த நபர் மும்பையைச் சேர்ந்த சித்தேஷ்வர் தண்டேலின் தந்தை என்பதும், உடனடியாக மருத்துவ உதவி அளிக்கப்பட்டதும் தெரிய வந்துள்ளது. டெப்யூட்டி கமிஷனர் சோனம் குமார் இதுகுறித்து தெரிவித்ததாவது, “முதியவரின் உடல் நிலை தற்போது சீராக உள்ளது.

அவரது மகன் சித்தேஷ்வர் தண்டேல் தற்போது தந்தையுடன் வீடு திரும்பியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக எந்தவித புகாரும் பதிவாகவில்லை” என தெரிவித்தார். இந்தக் கொடூரமான நிகழ்வு, வயதானோருக்கு குடும்பத்தினர் செலுத்தும் கவனத்தின் பற்றாக்குறையையும், மனிதாபிமானத்தின் கீழ்த்தர நிலையையும் வெளிப்படுத்துகிறது.